“தமிழ் பேசும் இலங்கையர்களின் தேசிய இருப்பை அழித்தொழிக்கும் ராஜபக்ச அரசு, தமிழ் மொழியைப் பேசுகின்ற, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மதங்களைக் கடைபிடிக்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களை ஜனநாயகப் போராட்டங்களை நோக்கித் தள்ளிவிட்டுள்ளது.”
இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“நடப்பு ராஜபக்ச அரசின் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற என்ற கூச்சல் நடைமுறையில், ‘ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம்’ என்பதில் வந்து நிற்கின்றது. இதை நாம் இன்று தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளோம். இந்த ஏகபோக கொள்கையை நாம் ஒருபோதும் ஏற்க முடியாது. இதை இந்த நாட்டு அரசும், உலகமும் புரிந்துகொள்ள வேண்டும்.
உண்மையில் ஒளிவு மறைவு இல்லாமல் இதை இந்த அரசு செய்வதை எண்ணி நாம் மகிழத்தான் வேண்டும். உள்ளொன்று வைத்து புறமொன்று செய்யவில்லையே, இவர்கள்..! இந்தநிலையில், அனைத்து ஜனநாயக சக்திகளையும் அணிதிரட்டி இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக, இந்த நாட்டில் எமது இருப்பை உறுதி செய்துகொள்ள நாம் போராட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த தேசிய ஜனநாயகப் போராட்டம் இப்போது ஆரம்பித்திருப்பதை எண்ணி மகிழ்கின்றேன்.
இந்த இலங்கை திருநாடு, ‘பன்மொழி, பன்மத, பல்லின’ அடிப்படையைக் கொண்ட பன்மைத்துவ நாடு என்ற இலக்கு அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும் வரை இந்தப் போராட்டம் தொடர வேண்டும்.
இந்த நாட்டின் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற பங்கும், இன்றைய இலங்கை நாட்டின் ஆட்சி உரிமை, இறைமை ஆகியவற்றில் தமிழ் பேசும் மக்களுக்கு இருக்கின்ற மறுக்கப்பட முடியாத உரிமையும் உறுதிப்படுத்தப்படும்வரை இந்தப் போராட்டம் தொடர வேண்டும்.
தமிழ் பேசும் மக்களையும் உள்ளடக்கியதே இலங்கை நாடு என்ற அடிப்படை உண்மையை சிங்கள முற்போக்கு சிந்தனையாளர்கள் ஏற்றுக்கொண்டு கண் திறக்கும்வரை இந்தப் போராட்டம் தொடர வேண்டும்.
இதுவே ராஜபக்ச ஆட்சியின் ‘ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே இனம், ஒரே மதம், ஒரே மொழி’ என்ற கொள்கைக்கு உரிய தர்க்கரீதியான அரசியல் பதிலாகும்.
இந்த ஜனநாயகப் போராட்டத்துக்கு எமது ஆதரவை நல்குகின்றோம். ஜனநாயகப் போராட்டக் களத்தில் நிச்சயமாக நாம் கரம் கோர்ப்போம்” – என்றுள்ளது.