பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை முதல் நாள் பேரணி முடிவடைந்துள்ளது. முதல்நாளான இன்று, மட்டக்களப்பு தாழங்குடாவில் முடிவடைந்தது.
நாளை காலை 8.30 மணிக்கு தாழங்குடாவிலிருந்து கிளம்பும் பேரணி, மாலை 5.30 மணிக்கு திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு நகரை சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது.
பேரணி தற்போது மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியை அடைந்துள்ளது. இன்று தாழங்குடா பகுதியில் போராட்டம் முடிவடையவுள்ளது.
3.40 PM
அம்பாறையின் பொத்துவில் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் நுழைந்துள்ளது.


02.50 PM
கல்முனை நகருக்குள் போராட்டம்: போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம்!
கல்முனை நகரிற்குள் தற்போது பெரியளவிலான ஆர்ப்பாட்ட போராட்டமாக இடம்பெற்று வருகிறது. இதனால் கல்முனை நகரின் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
வாகன பேரணி சம்மாந்துறை பகுதிக்கு வந்த போது, சம்மாந்துறை பொலிசார் நீதிமன்ற உத்தரவுகளை அரசியல் பிரமுகர்களிடம் வழங்க முற்பட்டனர். பலர் அவற்றை பெற்றுக்கொள்ளவில்லை.
இரா.சாணக்கியன் பெரும் தர்க்கத்தின் பின்னர் தடையுத்தரவு பிரதியை பெற்றுக்கொண்டார். அவர் கல்முனை மாநகர பிரதேசத்திற்குள் வாகனத்தை விட்டு கீழே இறங்க முடியாது.
அதேவேளை, கோவிந்தம் கருணாகரன் எம்.பியிடம் தடையுத்தரவை வழங்க முற்பட்ட போது, அவர் அதை தட்டிவிட்டு தொடர்ந்து முன்னேறினார்.
முன்னதாக, காரைதீவிலும் வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டது. போராட்டக்காரர்கள் அவற்றை தூக்கிவீசிவிட்டு முன்னகர்ந்தனர்.
1.30PM
அல்லிமுனை பள்ளம் பகுதியில் வீதித்தடைகளை ஏற்படுத்தி போராட்டக்காரர்களை பொலிசார் வழிமறித்தனர். அதை மீறி யாரும் செல்ல முடியாதென வீதித்தடைகளையும் ஏற்படுத்தினர்.
வாகன பேரணியாக வந்த போராட்டக்காரர்கள் இறங்கி, வீதித்தடைகளை தூக்கி வீசினர்.
பின்னர் பேரணி தொடர்ந்து முன்னேறி வருகிறது.
1.10PM
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஒரு குழுவினரும் இணைந்துள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை அமைச்சருமான ஏ.எல்.நசீர் தலைமையிலான குழுவினர் அட்டாளைசேனையில் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.

அங்கு நடைபவனியாக பேரணி சென்றது. அதில் பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டன. ஜனாசா எரிப்பிற்கு எதிராகவும் கோசம் எழுப்பப்பட்டது.
12.20 PM- ஆலையடிவேம்பு, அட்டாளைசேனையில் மீண்டும் தடைகள் தகர்க்கப்பட்டன!பொத்துவிலில் ஆரம்பித்த பேரணி தடைகளை கடந்து தொடர்ந்து முன்னேறி வருகிறது.கோமாரியிலிருந்து வாகன பேரணியாக வந்த போராட்டக்காரர்கள் ஆலையடி வேம்பில் கால்நடையாக பேரணியில் ஈடுபட்டனர். இங்கும் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டு, வீதித்தடைகளும் இடப்பட்டன.அக்கரைப்பற்றிற்கு பேரணி வந்தபோது, அங்கும் நீதிமன்ற தடை உத்தரவுகளுடன் பொலிசார் நின்றனர். போராட்டக்காரர்களிடம் நீதிமன்ற தடைகளை காண்பிக்க முயன்றபோது, அதை தட்டிவிட்டு பேரணி முன்னேறியது.
எனினும், அதை உடைத்துக் கொண்டு பேரணி முன்னேறி வருகிறது. தற்போது அட்டாளை சேனைக்குள் நுழைந்துள்ளது.




11.20 AM- காட்டாற்று வெள்ளமாக முன்னேறும் பேரணி: திண்டாடும் பொலிஸ், இராணுவம்!
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தில் ஈடுபடும் போராட்டக்காரர்கள் காட்டாற்று வெள்ளமாக முன்னேறி வருவதால், தடைகளை ஏற்படுத்த முனையும் பொலிசாரும், இராணுவத்தினரும் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
போராட்டக்காரர்களை வழிமறிக்க இராணுவத்தினரும், பொலிசாரும் பல தயார்படுத்தல்கள மேற்கொண்ட சமயங்களில், அந்த பாதைகளை தவிர்த்து வேறு மார்க்கங்களையும் பயன்படுத்தி போராட்டக்காரர்கள் தண்ணி காட்டி வருகிறார்கள்.
இன்று காலை 9.40 அளவில் பொத்துவில் நகரில் போராட்டம் ஆரம்பித்தது. போராட்டக்காரர்களிடமிருந்த பதாதைகளை பறிக்க பொலிசார் முயன்றபோது, அவர்களை தள்ளிவிட்டு பேரணி முன்னகர்ந்தது. பொலிசார் வீதித்தடைகளை அமைத்த போது, அதையும் உடைத்தெறிந்து கொண்டு முன்னேறினர்.
சுமார் ஒன்றரை கிலோமீற்றர் நகர்ந்த போது குண்டுமடுவில், பொலிசார் தடை செய்தனர். அங்கிருந்து வாகன பேரணியாக போராட்டக்காரர்கள் முன்னேறினர்.
பின்னர், தாண்டியடி, திருக்கோவில், தம்பட்டை, ஆலையடி வேம்பு பகுதிகளில் வாகன பேரணியை பொலிசார் தடுத்தனர்.
சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்தே தாம் முன்னேறுவதாக விளக்கமறித்து போராட்டம் தொடர்கிறது.
இடையில், கோமாரியில் சுமார் அரை கிலோமீற்றர் தூரம் நடைபவனியாக பேரணி சென்றது.
காலை 11.15 அளவில் காரைதீவை போராட்டக்காரர்கள் சென்றடைந்தனர்.
11.00 AM-போராட்டத்தை அடக்க விசேட அதிரடிப்படை, பிசிஆர்; கோட்டா அரசின் கடைசி உத்தி!
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தை தடுத்து நிறுத்த பாதுகாப்பு தரப்பினர் பகீரத பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். பொத்துவில் நகரத்தில் பேரணி ஆரம்பித்த போது பொலிசார் வீதித்தடைகளை ஏற்படுத்திய போது, போராட்டக்காரர்கள் அதை உடைத்தெறிந்து விட்டு முன்னகர்ந்தனர்.
இதையடுத்து திருக்கோவில் பகுதியில் போராட்டக்காரர்களை வழிமறிக்க விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், போராட்டத்தை அடக்க கடைசி வழியாக பிசிஆர் உத்தியை பொலிசார் கையிலெடுக்கவுள்ளதாகவும் அறிய வருகிறது.
கல்முனை பகுதியில் வைத்து அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யவுள்ளதாக அறிவித்து தடுத்து நிறுத்த தீவிர முன்னாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
9.40 AM- பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை: பொலிசாரின் தடைகளை உடைத்துக் கொண்டு புறப்பட்டது பேரணி
நில அபகரிப்பு, மத அடையாளங்களை அழித்தல், தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்தும், கண்டித்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமானது சற்றுமுன்னர் பொத்துவில் பிரதேசத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது
பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, தமிழ்த் கட்சிகளின் ஆர்ப்பாட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு முஸ்லிம்களிடமும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்
நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், தொல்பொருள் என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பூர்வீக வாழிடங்களை ஏப்பமிடல், பேரினவாத அழுத்தங்களுக்கு அடிபணியும் அரசின் போக்குகள் மற்றும் ஜனாஸா எரிப்பு என்பவற்றைக் கண்டித்தே இந்த கண்டன நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த போராட்டத்திற்கு தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவரும் ஆதரவு வழங்கியுள்ள நிலையில் பலருக்கு நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போராட்டம் ஆரம்பிக்க முன்னர் நீதிமன்ற தடையுத்தரவு பொலிசாரால் வழங்கப்பட்டது.
அத்துடன், போராட்டக்காரர்களின் பதாதைகளை பொலிசார் பறிக்க முயன்றனர். போராட்டத்தையும் தடுக்க முயன்றனர். பொலிசாரை தள்ளிவிட்டு, தடைகளை விலக்கிக் கொண்டு போராட்டக்காரர்கள் முன்னேறினர்.











பொலிசார் வீதித்தடைகளை ஏற்படுத்தி தடுக்க முயன்றனர். அதையும் போராட்டக்காரர்கள் உடைத்துக் கொண்டு முன்னேறி வருகிறார்கள்.