தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான டாப்சி, தொடர்ந்து அஜித்தின் ‘ஆரம்பம்’, லாரன்ஸுடன் ‘காஞ்சனா 2’, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய ‘வை ராஜா வை’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதையடுத்து பாலிவுட்டுக்கு சென்ற இவர், அங்கு வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வரும் டாப்சி, சமீபத்தில் பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். சினிமாவில் சாதிக்க துடிப்பவர்களுக்கு தனது பட நிறுவனத்தில் வாய்ப்பளிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகை டாப்சி அடுத்ததாக தயாரிக்க உள்ள படத்தில் நடிகை சமந்தா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்றும், இப்படம் மூலம் நடிகை சமந்தா பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.