பொதுமக்கள் பண்டிகை காலத்தில் அநாவசியமான நடமாட்டங்களை தவிர்த்துஇ சுகாதார பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் தற்போதுள்ள கொரோனா நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ். குடாநாட்டில் கொரோனா தொற்று பரவுகின்ற வீதம் சற்று குறைவடைந்துள்ளது. நேற்று உடுவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது தற்போதுவரை எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.
அதே நேரத்தில் நேற்றுமுன்தினம் 3 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தின் பின்னர் 120 பேர் யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 25 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களுடன் தொடர்புபட்ட வகையிலே சுய தனிமைப்படுத்தலுக்குட்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்திருக்கிறது.
2,176 குடும்பங்களைச் சேர்ந்த 6,109 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அரசின் சுற்று நிரூபங்களுக்கமைய அவர்களுக்கு தேவையான உணவுப் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றதுடன் தொற்று இனங்காணப்பட்டவர்களுக்கும் அரசினுடைய உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
தற்போது அர்ப்பணிப்பு மிக்க சுகாதார பகுதியினருடைய சேவையின் காரணமாகவும் அதேபோல் பொதுமக்களுடைய ஒத்துழைப்பினாலும் ஓரளவுக்கு தொற்று நிலமையினை யாழ். மாவட்டத்தில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம்.
இருந்த போதிலும் அபாய நிலை இன்னும் நீங்கிவிடவில்லை. ஆகவே இது ஒரு பண்டிகை காலமாக இருக்கின்ற காரணத்தினால்இ அதேபோல சைவ ஆலயங்களிலும் விரத பூசைகள் இடம்பெற்றுவருகின்றன.
நத்தார் தினம் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள் இடம்பெற உள்ளன. பொதுமக்கள் தங்களுடைய அன்றாட நடவடிக்கைகளை மிகவும் கவனமாகச் செயற்படுத்த வேண்டும்.
அநாவசியமாக கடைகளுக்கு செல்லுதல் அல்லது குழந்தைகளை அழைத்துக்கொண்டு கடைக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். அநாவசியமான ஒன்றுகூடல்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
சுகாதார பிரிவினுடைய அறிவுறுத்தல்களையும் வழிகாட்டல்களையும் பின்பற்றி முகக்கவசம் அணிந்து அதேபோல தொற்று நீக்கி திரவங்களை பாவித்து தங்களுடைய கடமைகளை புரிதல் அவசியம்
இருந்தபோதிலும் அநாவசியமான நடமாட்டங்களை தவிர்த்தல் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
மேலும் இந்த காலம் மிக அபாயமான காலமாக இருக்கின்றமையினால் அனைவருடைய ஒத்துழைப்பும் இந்த விடயத்திற்கு தேவை.
பாடசாலைகள் தற்பொழுது தற்காலிகமாக இரண்டு விடயங்களில் மூடப்பட்டு இருந்தாலும் கூட கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு இணங்க எதிர்வரும் மாதம் அனைத்து பாடசாலைகளும் ஆரம்பமாகவுள்ளது. அதன் போதும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பாடசாலை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுதல் அவசியம்.
தற்போதுள்ள சவால்களுக்கு அனைவரும் ஒத்துழைத்து செயற்படுவதன் மூலம் எமது மாவட்டத்தினை தொற்றில் இருந்து காப்பாற்ற முடியும் எனவும் தெரிவித்தார்.