ஐ.நா.அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக இலங்கை இராணுவத்தின் 20அதிகாரிகள், 223 படையினரைக் கொண்ட இராணுவ அணி, மாலிக்கு புறப்படுவதற்குத்தயாராகியுள்ளது.
இந்த இராணுவ அணி, மயிலிட்டியில் தொடங்கி, மின்னேரியா வரை, ஹமாட்டன் – 3 என்ற பெயரில், களப் பயிற்சி ஒத்திகையை, கடந்த வாரம் நடத்தியுள்ளது.
மயிலிட்டியில் இருந்து கடந்த 12ஆம் திகதி 6 துருப்புக்காவிகள், 6யுனிபவல் கவச வாகனங்கள் உள்ளிட்ட 47 வாகனங்களுடன் புறப்பட்ட இந்த இராணுவ அணி,கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்கள் வழியாக,பொலன்னறுவவின் மின்னேரியா இராணுவ முகாமை கடந்த 16ஆம் திகதி சென்றடைந்தன.
ஐந்து கட்டங்களாக வழி நெடுக பயிற்சிகளை மேற்கொண்ட படி சென்ற இந்தஇராணுவ அணிக்கு 15 ஆவது ஆட்டிலறிப் படைப்பிரிவில் உருவாக்கப்பட்டுள்ள ட்ரோன் அணி,வழிகாட்டல் மற்றும் கண்காணிப்பு உதவிகளை வழங்கியிருக்கிறது. இராணுவத்தின் 12 ரெஜிமண்டுகளைக் கொண்ட இந்த இராணுவ அணி, மாலிக்குப்புறப்படத் தயாராகியுள்ள நிலையில், ஐ.நா. அமைதிப்படையில் இருந்து இலங்கை இராணுவத்தைவெளியெற்ற வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்திருக்கிறது.

இறுதிக்கட்டப் போரில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இலங்கைஇராணுவம், அதற்கு பொறுப்புக்கூறாத நிலையில், ஐ.நா. அமைதிகாப்பு நடவடிக்கைகளில்இருந்து விலக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஏற்கனவே, பலமுறை இந்தக்கோரிக்கைகளை விடுத்திருந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு ஐ.நா. அமைதிப்படை நடவடிக்கைகளில் இருந்து இலங்கைஇராணுவத்தை வெளியேற்றும் முடிவு ஐ.நா.வினால் எடுக்கப்பட்ட போதும், மாலி போன்றசிக்கலான களங்களில் இலங்கைப் படைகளை பணியில் அமர்த்துவதற்கு ஐ.நா. இன்னமும்தடைவிதிக்கவில்லை.

மாலி போன்ற ஆபத்தான நாடுகளில் பணியாற்ற பல நாடுகள் பின்னடிப்பதுஇலங்கை இராணுவத்துக்கு சாதகமான நிலையாக உள்ளது. அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா. அமைதிப்படையில் இலங்கைப் படைகளின்பங்களிப்பை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும், கடுமையான ஆய்வுக்குட்படுத்த வேண்டும்என்றும் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.

ஐ.நா. அமைதிப்படையில் பங்கேற்கும் இலங்கைப் படையினரின் மனித உரிமைபதிவுகள் சரியாக ஆய்வுக்குட்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாகஇருந்து வருகிறது.
இவ்வாறான நிலையில் தான், மாலியில் பணியாற்றுவதற்கான அடுத்த அணியை இலங்கை இராணுவம் தயார்படுத்தியிருக்கிறது.
இந்த அணிக்கான களப்பயிற்சி ஒத்திகைகள் யாவும் தற்போது ஐ.நா.வின்அறிக்கைகளில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளவரும், அமெரிக்காவினால்பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளவருமான இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சவேந்திரசில்வாவின் மேற்பார்வையிலேயே இடம்பெற்றுள்ளன.

அத்துடன், இந்த நடவடிக்கைகளை மேற்பார்வை செய்த மற்றொரு அதிகாரியானமேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னான்டோவும் இறுதிப் போரில் பற்றாலியன் கட்டளைஅதிகாரியாக பங்கெடுத்த – குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளவர் தான்.

குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இவ்வாறான அதிகாரிகளின் வழிகாட்டலில்தான், ஐ.நா. அமைதிப்படைக்கு இலங்கை இராணுவத்தினர் தயார்படுத்தப்பட்டு,அனுப்பப்படுகின்றனர் என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.
மாலியில் பணியாற்ற அடுத்த இராணுவ அணி தயாராகியுள்ள நிலையில், ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு, ஐ.நா.அமைதிப்படையில் இருந்து இலங்கை இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையைமுன்வைத்திருக்கிறது யஸ்மின் சூகாவை நிறைவேற்றுப் பணிப்பாளராக கொண்ட சர்வதேச உண்மைமற்றும் நீதிக்கான திட்டம்.

அத்துடன், Just Security என்ற ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில்,போர்க்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ராப்பும்இதே கருத்தை வலியுறுத்தியிருக்கிறார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளநிலையில், இந்த விவகாரம் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இந்தக் கூட்டத்தொடரில், இலங்கைக்குஎதிராக முன்வைக்கப்படவுள்ள தீர்மானத்தில், ஐ.நா. அமைதிப்படையில் இருந்து இலங்கைஇராணுவத்தை வெளியேறக் கோரும், விடயமும் உள்ளடக்கப்படக் கூடும்.
அவ்வாறான நிலை ஏற்பட்டால், மாலிக்குப் புறப்படவுள்ள இலங்கைஇராணுவத்தினரின் பயணம் கேள்விக்குறியாக மாறுவதுடன், மாலி, தென்சூடான், மத்தியஆபிரிக்க குடியரசு உள்ளிட்ட சில நாடுகளில், ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றும்இலங்கைப் படையினரின் எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறும். முன்னர் ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கைப் படையினர் ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றி வந்த போதும், இப்போது அந்தஎண்ணிக்கை பாதிக்கும் மேலாக குறைந்து விட்டது. இலங்கை இராணுவத்துக்குப் புறம்பாக, இலங்கை விமானப்படையும், ஐ.நா. அமைதிப்படையில் வலுவான பங்களிப்பை செலுத்திவருகிறது.

தென்சூடான் மற்றும், மத்திய ஆபிரிக்க குடியரசு ஆகிய இடங்களில் இலங்கைவிமானப்படையின் தலா 110 பேர் கொண்ட அணிகள் எம்.ஐ-17 ஹெலிகொப்டர்களுடன் நிலைகொண்டுள்ளன.

இலங்கை விமானப்படை மீது நேரடியான போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாவிடினும்போர்க்காலத்தில் பொதுமக்கள் இலக்கு வைக்கப்பட்ட சம்பவங்களுடன் விமானப்படை மீது பலகுற்றச்சாட்டுகள் உள்ளன.
ஆனால், இலங்கை விமானப்படை அந்தக் குற்றச்சாட்டுகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. இலங்கை விமானப்படையின் இரண்டாவது உயர்நிலைப் பதவியான, விமானப்படை தலைமை அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற தமிழரானஎயர் வைஸ் மார்ஷல் பிரேமச்சந்திராவும் கூட, பொதுமக்கள் விமானப்படையினரால் இலக்குவைக்கப்படவில்லை என்றே கூறிவந்தார்.

எயர் வைஸ் மார்ஷல் பிரேமச்சந்திராவின் மரண அறிவித்தல் கடந்தஞாயிற்றுக்கிழமை வெளியாகியிருந்தது. தொண்டைமானாற்றை பிறப்பிடமாக கொண்ட பாலசுந்தரம் பிரேமச்சந்திரா (பொபி)என்று மட்டும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவர் முன்னாள் விமானப்படை அதிகாரி என்றோ, அவரது பதவிநிலை பற்றியோஅதில் பிரசுரிக்கப்படவில்லை. கொரோனா தொற்றினால் கடந்த 2ஆம் திகதி லண்டனில் மரணமான அவரது இறுதிக்சடங்கு கடந்த புதன்கிழமை அங்கேயே இடம்பெற்றது.
இறுதிப் போரில், விமானப்படையின் நடவடிக்கை தளபதியாக இருந்த, எயர்வைஸ் மார்ஷல் பிரேமச்சந்திரா, பின்னர் விமானப்படைத் தலைமை அதிகாரியாகவும் பதவிவகித்தார். இலங்கை விமானப்படையில் அவரது செயற்பாடுகள் கடுமையானவிமர்சனங்களுக்குரியதாகவும், போரில் இடம்பெற்ற மீறல்களை நியாயப்படுத்துவதாகவும்இருந்தது.
1981இல் விமானப்படையில் விமானியாக இணைந்த அவர், இலங்கைவிமானப்படையில் கட்டுநாயக்க, அனுராதபுர உள்ளிட்ட முக்கிய தளங்களின் கட்டளை அதிகாரிஉள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர்.
அனுராதபுர விமானப்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் 2007இல்நடத்திய கொமாண்டோ தாக்குதல் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின்தலைவராகவும் எயர் வைஸ் மார்ஷல் பிரேமச்சந்திரா செயற்பட்டிருந்தார்.
இலங்கை அரசுக்கு விசுவாசமான நம்பகமான படைத் தளபதியாக செயற்பட்டபோதும்,ஒரு தமிழர் என்பதால், அவருக்கு விமானப்படைத் தளபதியாகும் வாய்ப்பு மஹிந்தராஜபக்ஷ அரசினால் வழங்கப்படவில்லை.

2011இல், அவர் பதவி உயர்வு மறுக்கப்பட்டு ஓய்வுபெற்ற பின்னரும்,இறுதிப்போரில் விமானப்படை மீதான குற்றச்சாட்டுகளை தெளிவாக மறுத்து வந்தார்.
பின்னர், அவன்ட் கார்ட் பாதுகாப்பு சேவையுடன் தொடர்புபட்டிருந்ததால்,கடந்த 2019ஆம் ஆண்டு எயர் வைஸ் மார்ஷல் பிரேமச்சந்திராவை கைது செய்யுமாறு சட்டமாஅதிபர் டப்புல டி லிவேரா பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தார்.

ஆனாலும், அவர் கைது செய்யப்படாத நிலையில், லண்டனில்மரணமடைந்திருக்கிறார். இவரைப் போன்ற, போர்க்கால மீறல்களுக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் பலர், வெளிநாடுகளில் உள்ளனர்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், கொண்டு வரப்படும்தீர்மானத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகள் மீது பயணத்தடை, சொத்துமுடக்கங்கள் என்ற விடயம் உள்ளடக்கப்படுமானால், வெளிநாடுகளில் தங்கியுள்ள படைஅதிகாரிகள் பலரது நிலை கேள்விக்குள்ளாகும்.
ஆக, போர்க்கால மீறல்கள் இப்போது இலங்கை படைகளின் கழுத்தை நெரிக்கத்தொடங்கியிருக்கின்றன. ஆனாலும், பொறுப்புக்கூறலை நோக்கி இலங்கையை தள்ளிச் செல்லப் போதுமானநடவடிக்கையாக இது இருக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
