மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாது முககவசங்கள் இன்றி வீட்டு வளாகத்திற்குள் நுழையும் தேசிய நீர்வழங்கல் அதிகாரசபை ஊழியர்கள் குடிநீர் இணைப்பைத் துண்டித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கொரோனா வைரஸ் தாக்கம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் நிலையில் பொது மக்கள் தங்களது நாளாந்த வாழ்வாதாரத்திற்காகத் தினம் தினம் கஷ்டப்பட்டு வரும் நிலையில் எந்தவித மனிதாபிமானமும் இன்றி மட்டக்களப்பு மாவட்ட நீர்வழங்கல் அதிகாரசபை பணம் செலுத்தாது இருந்த பல சமுர்த்தி உதவி பெறும், வறுமையான குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பைத் துண்டித்து வருகின்றனர்.
இவ்வாறு குடி நீர் இணைப்பைத் துண்டிக்க வரும் மட்டக்களப்பு மாவட்ட நீர்வழங்கல் அதிகாரசபை ஊழியர்கள் எந்த வித சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளையும் கைக்கொள்ளாது வீட்டு வளாகத்திற்குள் நுழைந்து குடிநீர் இணைப்பைத் துண்டித்து வருகின்றனர்.
மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சுகாதார நடைமுறைகளை மீறி அவசர அவசரமாகக் குடிநீர் இணைப்பைத் துண்டித்து வருவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு புறம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், மறு புறம் கொரோனா அச்சம் காரணமாக பல குடும்பங்கள் வருமானத்தை இழந்து தவிக்கும் நிலையில் குடி நீரைத் துண்டித்து விட்டு இரண்டு நாட்களுக்குள் முழுக் கட்டணத்தையும் செலுத்தினால் தான் குடிநீர் இணைப்பைத் தருவோம் என்று கூறுவது இந்த அனர்த்த காலத்தில் எந்த வகையில் நியாயம்.
வீடுகளில் உள்ள கிணறுகள் எல்லாம் வெள்ளத்தில் நிரம்பி பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளது. இந்த நேரத்தில் குடிநீரைத் துண்டிக்க வேண்டாம். அரைவாசி பணத்தை செலுத்துகிறோம், மீதியைப் பின்னர் செலுத்துகிறோம் என்று வறுமையில் உள்ள குடும்பங்கள் கெஞ்சிய போதும் “அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது அரசாங்கம் ஓடர் போட்டுள்ளது. அதை தான் நாங்கள் செய்வோம்” என்று எந்த வித மனிதாபிமானமும் இன்றி குடிநீரைத் துண்டித்து விட்டுச் சென்றுள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பு, பொதுமக்களின் வாழ்வாதார குறித்துச் செயற்பட்டு வரும் மட்டக்களப்பு மாவட்ட கொரோனா செயலணி இது போன்ற மனிதாபிமானம் அற்ற சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறிய செயற்பாட்டிற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது.
மாவட்ட அரசியல் தலைவர்கள் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றார்கள் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


