இலங்கையில் நிதி நிறுவனம் ஒன்றினை நடத்தி மக்களிடமிருந்து 1200 கோடி ரூபாய் மோசடி செய்த நபரே யாழ்ப்பாணத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற நிலையில் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுளார்.
இவர்கள் ஒரு பைப்பர் படகில் தமிழகத்தின் வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் நேற்றிரவு வந்திறங்கியதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.
திருகோணமலை பகுதியை சேர்ந்த முகமது அன்சாரி (வயது 45) அவரது 35 வயதுடைய மனைவி மற்றும் மகன் ஆகிய மூன்று பேரும் கோடியக்கரை சவுக்கு காட்டில் வந்து இறக்கிய வேளை வேதாரண்யம் கடலோர காவல் படையினர் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
அவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ;டம் காரணமாக இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதியாக தப்பி வந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அண்மைக் காலமாக நிதி நிறுவனம் ஒன்று நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் பண மோசடி செய்து தலைமறைவான நிலையில் பல்வேறு பிரதேசங்களில் நீதிமன்றங்களில் இவருக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் கடந்த 6 வருடங்களாக கிழக்கு மாகாணம் அடங்கலாக நாட்டின் சில பகுதிகளில் இயங்கி வந்த குறித்த நிதி நிறுவனம் கிழக்கின் முக்கிய நகரங்களில் கிளைகளைக் கொண்டு இயங்கியதுடன் கல்முனை, மருதமுனை, சம்மாந்துறை, பொத்துவில் உள்ளிட்ட பிரதேசங்கள் முழுவதிலும் மொத்தமாக 200 கோடி ரூபாயையும் நாடு முழுவதிலும் 1200 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.