சிறைக்கைதிகள் தொடர்பில் மனிதாபிமானமாக நோக்கி அவர்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானதன் காரணமாக 12,000 க்கும் மேற்பட்டோர் சிறையில் உள்ளனர். அவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தி புனர்வாழ்வு திட்டத்தை வகுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
சிறைச்சாலைகளில் நிலவும் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராயவும் தீர்வுகளை பரிந்துரைக்கவும் நேற்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
சிறைச்சாலைகளுக்குள் இருக்கும் நெரிசலைக் குறைக்க தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் முன்பே பொருத்தப்பட்ட முறைமையிலான சிறைச்சாலைகளை அமைப்பதற்கான சாத்தியத்தை ஆராயுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
வெளிநாடுகளில் உள்ள சிறைச்சாலைகளின் மாதிரிகளை ஆராய்ந்து, வசதிகளை வழங்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இரசாயன பகுப்பாய்வாளர், சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களங்களில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக ஏராளமானோர் சிறைச்சாலைகளில் உள்ளனர். சுங்கத் திணைக்களம், பொலிஸ், சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இணைந்து ஜனாதிபதி செயலணியொன்றை நிறுவி தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நீதி அமைச்சர் எம்.யூ.எம். அலி சப்ரி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் செயலாளர்கள், பாதுகாப்புத் துறை முக்கியஸ்தர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.