திருகோணமலை ஆனந்தபுரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் 16 வயது சிறுமி ஒருவர் அன்றைய தினமே உயிரிழந்த நிலையில் இறுதிக் கிரியை இன்று இடம்பெற்றுள்ள நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுமியின் தாயாரும் இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை ஆனந்தபுரி பகுதியினைச் சேர்ந்த என்.நாகேஸ்வரி (31வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு நஞ்சருந்திய தாய் உட்பட 4 பேர் கடந்த 6ஆம் திகதி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் மகள் என்.விதூசிகா (16 வயது) அன்றைய தினமே உயிரிழந்திருந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று இடம்பெற்றுள்ளது. இதேவேளை அவரது தாயார் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் திருகோணமலை ஆனந்தபுரி பகுதியைச் சேர்ந்த என்.வைஸ்னவி (12வயது) ,என்.ஐஸ்வர்யா (08வயது) மற்றும் என். கஜவீர் (02வயது) ஆகியோர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களது தந்தை அண்மையில் இரண்டாவது திருமணம் முடித்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் நஞ்சு அருந்தியமைக்கான காரணம் எதுவும் இதுவரை அறிவிக்கப்படாத போதிலும். குடும்பத்தை விட்டு இவர்களது குடும்பத் தலைவர் மறுமணம் முடித்து அவர்களைத் தவிக்க விட்டமையே அவர்கள் மனமுடைந்து நஞ்சருந்தித் தற்கொலை செய்துகொள்ளக் காரணம் என உறவினர்கள், அயலவர்கள் மூலம் அறிய முடிகின்றது.
இவர்கள் கிளிநொச்சியை நிரந்தர வதிவிடமாகக் கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.