கிளிநொச்சியில் 2017 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இந்திய வீட்டுத் திட்ட வீடுகள் இன்றுவரை பூர்த்தியாக்கப்படாதமை தொடர்பில் ஒருங்கிணைப்புக் குழு நேரில் சென்று ஆராய்ந்துள்ளது.
கிளிநொச்சி மலையாளபுரம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் 24 வீடுகள் கொண்ட இந்திய வீட்டுத் திட்டத்தின் முன்னேற்ற நிலைமைகளை, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் நேரில் சென்று ஆராய்ந்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபை பிரதிப் பணிப்பாளர் சுபாஸ் மற்றும் இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் ஆகியோருடன், ஒருங்கிணைப்புக்குழு மேலதிக இணைப்பாளருடன் இணைந்து இந்த வீடுகளின் தற்போதைய நிலை குறித்து அவர் ஆராய்ந்துள்ளனர்.
2017ஆம் ஆண்டு பிற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வீட்டுத் திட்டம் இன்னமும் பூர்த்தியடையாமல் இருந்துவரும் நிலையில், விரைவில் இந்த வேலைத்திட்டத்தை விரைவுபடுத்தி பயனாளிகளுக்கு வீடுகளைக் கையளிக்க ஏற்பாடு செய்யும் வழிவகைகள் குறித்து இந்தியத் துணைத்தூதர அதிகாரி மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபை கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பணிப்பாளர் ஆகியோருடன் அவர் ஆராய்ந்துள்ளனர்.
இதன்போது, இந்தத் திட்டத்தைப் பூர்த்திசெய்வதற்கு அவசியமான இன்னமும் கிடைக்க வேண்டிய மிகுதி நிதி கிடைக்கப் பெற்றால் விரைவில் இந்தத் திட்டத்தைப் பூர்த்திசெய்ய முடியும் என்று தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வீடுகளுக்கு மின்சார இணைப்புக்கள் வழங்குதல் மற்றும் குடிநீர் விநியோகம் என்பனவற்றை துரிதப்படுத்த உடன் நடவடிக்கை எடுப்பதாக இதன்போது ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் தெரிவித்துள்ளார்.
