கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதாக அறிவித்த இலங்கை அதிலிருந்து பின்வாங்கியமை ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா ரெப்லிட்ஸ் இன்று (18) தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்யும் கொள்கையை முடிவிற்கு கொண்டுவருவதிலிருந்து அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்குவது ஏமாற்றமளிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார் .
இந்த விடயம் தொடர்பாக ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் உட்பட பொதுமக்களுக்கு ஜனநாயக அரசாங்கத்திடமிருந்து அவர்களின் உரிமைகளுக்கான மேலும் கௌரவம் வழங்கப்படவேண்டும் எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் என நாடாளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் அறிவித்திருந்தார்.
பிரதமரின் அறிவிப்பை அலெய்னா ரெப்லிட்ஸ் வரவேற்றதுடன், சர்வதேச பொது சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்பவும், மத சடங்குகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது ஒரு சாதகமான நடவடிக்கையாகும் என்றும் தெரிவித்திருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.