தங்கம் மற்றும் தங்க நகைகள் விற்பனை செய்யப்படுவதாக கூறி நபர்களை வரவழைத்து கொள்ளையில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவர் உட்பட 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொரட்டுவை, கடுவலை, ராகம மற்றும் வேயங்கொட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சந்தேகநபர்கள் நேற்றைய தினம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது இவர்களிடமிருந்து காரொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த 6 சந்தேகநபர்களில் 47 வயதுடைய ராகம பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரும் உள்ளடங்குகின்றார்.
குறித்த பெண் தொலைபேசியூடாகவும் , சமூக வலைத்தளங்களுடாகவும் தங்க நகைகள் விற்பனைக்கு உள்ளதாகத் தெரிவித்து புகைப்படங்களை அனுப்பி ஏனையோரை தொடர்பு கொண்டுள்ளார்.
அத்தோடு ஒரு கிலோ தங்கம் 93 இலட்சத்துக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி நகைகளை கொள்வனவு செய்ய வருபவர்களிடமிருந்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த மோசடி சம்பவம் தொடர்பில் குருணாகல் குற்ற விசாரணை பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.