வட மாகாண சபையின் விவசாய அமைச்சின் விவசாயத் திணைக்களம், கால்நடை உற்பத்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் வரும் காணித் திணைக்களம் என்பவற்றை மாங்குளம் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களுக்கு இடமாற்றுவதற்கு வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் என வடக்கின் அனைத்து மாவட்ட மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் இந் நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சின் கீழ் வரும் விவசாயத் திணைக்களம் மற்றும் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் என்பவற்றை மாங்குளம் பகுதிக்கு இடமாற்ற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதிகளவு விவசாய மற்றும் கால்நடை உற்பத்தி நடைபெறும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்கள் அதிக பயனடையக் கூடியதாக இருக்கும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி அமைச்சின் கீழ் வரும் மாகாண காணி ஆணையாளர் திணைக்களம் கிளிநொச்சிக்கு இடமாற்றப்படவிருப்பதாகவும், அதிகளவு காணி தொடர்பான பிணக்குகள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலேயே காணப்படுவதால், அந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு வசதியாக இந்த முடிவு எட்டப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.