கொழும்பில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக சடுதியாக அதிகரித்து வருவதனால் குறித்த பகுதி அபாயமுடையது என சுகாதார தரப்பினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இரண்டாம் அலையின் பின்னர் நேற்று காலை வரை 10,884 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு 1 தொடக்கம் 15 வரையான பகுதிகளிலும், வெலிக்கட, அங்கொடை, அத்திட்டிய, பொரல்லஸ்கமுவ, தெஹிவளை, கொத்தொட்டுவ, மடபத்த, புவக்பிட்டிய, ராஜகிரிய மற்றும் தலவத்துகொட ஆகிய பகுதிகளில் இவ்வாறு தொடர்ந்தும் தொற்றாளர்கள் இனங்காணப்படுவதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 27,000 ஐ கடந்துள்ள போதிலும் 20,000 இற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
இரண்டாம் அலை உருவானதன் பின்னர் அபாயமுடைய பிரதேசமாகக் காணப்பட்ட கம்பஹாவில் தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்திருந்தாலும், கொழும்பில் அதனை விட அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.